களக்காடு: களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டம் களக்காட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழும் இக்கோயிலில் வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியிருப்பது சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு விழா முதல் நாளான இன்று (27ம்தேதி) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெருமாள் ஸ்ரீ பூமி, நீலா தேவியர்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதன்பின் கோயில் கொடி மரத்தில் கருடன் படம் பொறித்த திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் இடம்பெற்றது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி வரதராஜபெருமாள் காட்சி அளிக்கிறார். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. விழாவின் 5ம் நாளான 31ம்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜலபதியும் உலா வருகின்றனர். 7ம் நாளான 2ம்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண விழா நடத்தப்படுகிறது.
8ம் நாளான 3ம் தேதி (திங்கட்கிழமை) இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் நாளான 5ம்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11ம் நாளான 6ம்தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.